தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக பணப்பட்டுவாடா செய்துவருவதாக திரிணமூல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்து வருகிறது. பாஜக சார்பில் பல்வேறு மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் மேற்குவங்க மாநிலத்திற்கு தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பேசிய மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசு தனது அதிகாரத்தை மாநிலத் தேர்தலில் தவறாகப் பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “நாங்கள் சாதாரண மக்கள். எனினும் தொடர்ச்சியாக போராடுவோம். தேர்தலில் பணத்தை முறைக்கேடாக பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். தேர்தலையொட்டி பாஜக தங்களது நிறுவனங்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்து வருகிறது” எனக் குற்றம்சாட்டினார்.