மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு மாநகராட்சித் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மஜத வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியுடன் மஜத கூட்டணி அமைத்து மேயர் பதவியைப் பிடித்துள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் துணை மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மேயர் பதவிக்கு மஜதவைச் சேர்ந்த ருக்மணிமாதே கெளடா, துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்வர் பெய்க் ஆகியோர் போட்டியிட்டனர்.
மாநகராட்சியில் பாஜகவுக்கு 26 உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சிக்கு 19 உறுப்பினர்கள், மஜதவுக்கு 18 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 உறுப்பினரும், சுயேச்சை உறுப்பினர்கள் 5 பேரும் உள்ளனர்.
அதில் 43 வாக்குகளைப் பெற்ற மஜதவைச் சேர்ந்த ருக்மணிமாதே கெளடா மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார்.
மேயர் தேர்தலில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த சுனந்தா பாலநேத்ரா 26 வாக்குகள் பெற்றார். துணை மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்வர் பெய்க் 43 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். துணை மேயர் தேர்தலில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த சத்விக் சந்தேஷ் 23 வாக்குகள் பெற்றார்.
தேர்தலில் மஜதவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜி.டி.தேவெ கெளடா, சட்ட மேலவை உறுப்பினர் சந்தேஷ் நாகராஜ் ஆகியோர் வாக்களிக்கவில்லை.
மாநகராட்சியில் மேயராக பெண் ஒருவர் தொடர்ந்து 4-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.