புது தில்லி: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுப்பிய பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பதாக பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் ராஜிநாமா செய்ததை அடுத்து, பேரவையில் பெரும்பான்மை இழந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமைக் கோராத நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த துணைநிலை ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியிருந்தார்.
இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும், புதுச்சேரி சட்டப்பேரவைக் கலைக்கப்படும். பிறகு புதுச்சேரியை நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.