தேச வளர்ச்சிக்கு தமிழகத்தின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாளை (வியாழக்கிழமை) கோவைக்கு வரவுள்ள நிலையில், அவர் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி ட்வீட்:
"தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப் படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்."
அரசு விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை மற்றும் புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி பயணத்தை முடித்துக்கொண்டு பிற்பகல் 3.30 மணிக்கு பிரதமர் மோடி கோவை வருகிறார்.
கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று மின்வாரியம், மத்திய கப்பல் போக்குவரத்து, குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், முடிக்கப்பட்ட பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் மாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதில் பாஜக முக்கியத் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்க உள்ளனர். பொதுக் கூட்டம் முடிந்ததும் கோவையில் இருந்து தனி விமானம் மூலம் தில்லி புறப்படுகிறார்.