நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இவர்களுடன் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய் பாதித்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மார்ச் 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் சுமார் 10 ஆயிரம் அரசு மருத்துவமனைகளிலும், 20 ஆயிரம் தனியார் மையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அரசு மையங்களில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயிப்பது குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.