மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்பட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதிஆயோக் கூட்டம் காணொலி வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், “ஒவ்வொரு நிகழ்வும் அரசியல் மயமாக்கப்பட்டு வருகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒரு அரசியல் கோணத்தில் பார்க்கப்படுகிறது. இந்த வகையான சூழ்நிலை நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், “இருப்பினும், ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கட்சி எல்லைக்கு அப்பால் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதாகும். மக்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசுகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.