புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற அரசுக்கு அக்டோபர் 2 வரை அவகாசம் வழங்கியுள்ளதாக பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் பேசியது:
"புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற அரசுக்கு அக்டோபர் 2 வரை அவகாசம் வழங்கியிருக்கிறோம். அதன்பிறகு, மேற்கொண்டு திட்டங்கள் வகுக்கப்படும். அதுவரை இங்குதான் இருப்போம். பயிர் கொள்முதலுக்கு குறைந்த ஆதரவு விலைக்கு சட்டம் இயற்றப்பட வேண்டும்."
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 26 முதல் விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தன.