ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் முன்னேறி வருவதாக காஷ்மீரைச் சேர்ந்த நாட்டின் மிக இளம் வயது விமானி என்ற பெருமையை பெற்றுள்ள ஆயிஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த 25 வயதான ஆயிஷா ஆஸிஸ், சிறு வயது முதலே பயணம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
இதன் விளைவாக ரஷியாவின் சோகோல் ஏர்பேஸ் நிறுவனத்தில் 15 வயதிலேயே மிக்-29 விமானத்தை இயக்குவதற்கான மாணவ விமானிக்கான அங்கீகாரத்தைப் பெற்றார்.
பின்னர் பாம்பே ஃபிளையிங் கிளப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு விமானத்தை இயக்குவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றார்.
இதனிடையே ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ''காஷ்மீரை சேர்ந்த பெண்கள் அதிக முன்னேற்றத்தை கண்டு வருகின்றனர். முக்கியமாக கல்வியில் அனைத்து பெண்களுமே முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் வரை பயின்று வருகின்றனர். பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள பெண்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றமடைந்துள்ளனர்.
சிறு வயது முதலே பயணம் செய்ய ஆர்வம் என்பதால், விமானியாகும் கனவை வளர்த்துக்கொண்டேன். இதன் மூலம் ஒரு நபர் பல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன் காரணமாகவே விமானியாக வேண்டும் என்று எண்ணினேன்.
இது 9 முதல் 5 மணி வரை செய்துவிட்டு வரும் வழக்கமான பணிகளைப் போன்று அல்ல. இதில் நிலையான வழக்கம் என்ற ஒன்று இல்லை. தொடர்ந்து புதிய இடங்களையும், புதிய மனிதர்களையும், புதிய காலநிலைகளையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
இந்த வகையான தொழிலில் பணி செய்பவரின் மனநிலை மிகவும் உறுதியானதாக இருக்க வேண்டும். ஏனெனில் விமானத்தில் பயணிக்கும் 200 பேரின் உயிருக்கான பொறுப்பு விமானியினுடையது.
எல்லா சூழலிலும் எனக்கு ஆதரவு தெரிவிக்கும் பெற்றோர்கள் கிடைத்தனர். அவர்களின்றி இப்பொழுந்து நான் இருக்கும் இடத்தை அடைந்திருக்க முடியாது. என் பணியிலும், சுயமாகவும் மேலும் பல வளர்ச்சியை காண விரும்புகிறேன். எனது தந்தை எனக்கு மிகப்பெரிய முன்மாதிரி'' என்று கூறினார்.