தில்லியில் ஆளுநர் மூலம் நேரடி ஆட்சி நடத்த மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து பேசிய தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தலைநகரான தில்லியை பின்வாசல் வழியாக ஆட்சி செய்ய மத்திய பாஜக முயற்சிக்கிறது. அதன்பொருட்டு ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இது நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் தில்லி மக்களுக்கு எதிரானது. தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தேர்தலிலும் பாஜக தோல்வியைத் தழுவி வரும் நிலையில், ஆளுநர் மூலம் பின்வாசல் வழியாக தில்லியை ஆட்சி செய்ய பாஜக முயற்சிக்கிறது என்று அவர் விமர்சித்தார்.