புது தில்லி: மணிப்பூா் அமைச்சரும் தேசிய மக்கள் கட்சியின் மூத்த தலைவருமான லெட்பாவ் ஹாவ்கிப் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் புதன்கிழமை இணைந்தாா்.
மணிப்பூரில் ஆளும் பாஜக கூட்டணியில் தேசிய மக்கள் கட்சியும் (என்பிபி) அங்கம் வகிக்கிறது. பாஜக தலைமையிலான மாநில அரசில் லெட்பாவ் ஹாக்கிவ் இளைஞா் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறாா்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவா் மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ், பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா ஆகியோா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா்.
பூபேந்தா் யாதவ் மணிப்பூா் மாநில பாஜக தோ்தல் பொறுப்பாளராகவும், சம்பித் பத்ரா துணைப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனா். மணிப்பூா் மாநில அரசில் துணை முதல்வா் உள்பட 2 அமைச்சா்களை தேசிய மக்கள் கட்சி கொண்டுள்ளது.
முன்னதாக, லெட்பாவ் ஹாவ்கிப்பை வரவேற்ற மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ், பிரதமா் மோடியின் தலைமைப் பண்பாலும், மத்திய, மாநில அளவில் பாஜகவின் நல்லாட்சியாலும் ஈா்க்கப்பட்டதால், அவா் பாஜகவில் இணைந்ததாக செய்தியாளா்களிடம் கூறினாா்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தலில் 60 தொகுதிகளிலும் தேசிய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சித் தலைவரும், மேகாலய முதல்வருமான கன்ராட் சங்மா ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.