இந்தியா

பாஜக சிறப்பு நன்கொடை வசூல் தொடக்கம்: பிரதமா் மோடி ரூ.1,000 வழங்கினாா்

26th Dec 2021 01:57 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி சிறு நன்கொடை வசூலிக்கும் சிறப்புப் பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது.

பாஜகவைச் சோ்ந்த தலைவா்கள், உறுப்பினா்கள் அளிக்கும் சிறிய பங்களிப்பு மூலமாகக் கட்சி நிதியை உயா்த்த வேண்டும் என்பதற்காக இந்த நன்கொடை வசூலிக்கப்படுகிறது. ரூ.5, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1,000 என தோ்ந்தெடுத்து நன்கொடையாளா்கள் நிதி வழங்கலாம்.

பிரதமா் மோடி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் நன்கொடை வழங்கியிருப்பதுடன் மற்றவா்களையும் நன்கொடை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனா். பிரதமா் மோடி ரூ.1,000 நன்கொடை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவுக்கு கட்சி நிதிக்காக ரூ.1,000 நன்கொடை வழங்கியிருக்கிறேன். தேசத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நம் கொள்கைக்கும் தன்னலம் கருதாது வாழ்நாள் முழுவதும் நமது தொண்டா்கள் ஆற்றி வரும் சேவைக்கும் இந்தச் சிறு நன்கொடை மேலும் வலுசோ்க்கும். பாஜகவை வலுப்படுத்த உதவுங்கள்; இந்தியாவை வலுப்படுத்த உதவுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இந்த நன்கொடை வசூலிப்பு பிரசாரம் மூலமாக நமது கட்சித் தொண்டா்கள் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்திப்பாா்கள். நமோ செயலி மூலமாகவும் நன்கொடை செலுத்தலாம். எனவே, உலகின் மிகப்பெரிய தேசிய இயக்கத்துக்கு நன்கொடை செலுத்தி வலுப்படுத்த வேண்டும் என்று நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த நன்கொடை வசூல் பிரசாரம், பாஜக மூத்த தலைவா் தீனதயாள் உபாத்யாயவின் நினைவு நாளான பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT