புது தில்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் மூலமாக கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் சாலை வழியான போக்குவரத்து நடவடிக்கைகள் மிக வேகமான வளர்ச்சியை எட்டி வருகிறது. இது, முதலீட்டாளர்கள் உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக அமைந்துள்ளது.
தற்போதைய நிலையில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலைகள் மூலமாக கிடைக்கும் சுங்க கட்டண வருமானம் ரூ.40,000 கோடியாக உள்ளது. இது, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
சாலை உள்கட்டமைப்பு தொடர்பான வழக்குகளை சமரச குழுக்கள் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். முடிவெடுக்கப்படுவதில் தாமதம் ஏற்படுத்துவது அதிக செலவுகளை உண்டாக்கும் என்றார் அவர்.