பனாமா மற்றும் பாரடைஸ் ஆவணங்களின் மூலம், இந்தியாவிலிருந்து கணக்கில் வராமல் ரூ.20,353 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி கூறியதாவது:
பனமா மற்றும் பாரடைஸ் ஆவணங்களின் அடிப்படையில், கடந்த அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி ரூ.20,353 கோடி முதலீடு கணக்கில் வராமல் மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் தொடா்புடைய 930 நிறுவனங்கள் மற்றும் நபா்களால் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நபா்களின் மேல், 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம், 2015-ஆம் ஆண்டின் கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வருமான வரித் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.