நாகலாந்தில் அமல்படுத்தியுள்ள ஆயுதப் பாதுகாப்பு சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என நாகலாந்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை இரவு பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் எனத் தவறாக நினைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், 13 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து நடந்த வன்முறையில், பொதுமக்கள் தரப்பிலிருந்து மேலும் ஒருவர் மற்றும் ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | நாகாலாந்து: ராணுவம் சுட்டதில் 14 பொதுமக்கள் பலி
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட நாகலாந்து அமைச்சரவை கூட்டத்தின் முடிவை செய்தித் தொடர்பாளர் நெய்பா குரோனு வெளியிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஐஜி தலைமையிலான 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசின் விசாரணைக் குழுவின் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் நாகலாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப் பாதுகாப்பு சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசிற்கு கடிதம் எழுதப்படும் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.