நாட்டில் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படுவது அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இது தொடா்பான கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:
கடந்த 2018-ஆம் ஆண்டில் 124-ஆக இருந்த பயணிகளுக்கான சிறிய மற்றும் நடுத்தர மின்சார வாகனங்களின் பதிவு தற்போது 1,356-ஆக அதிகரித்துள்ளது. சரக்குப் போக்குவரத்துக்கான மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2018-ஆம் ஆண்டில் 6,246-ஆக இருந்தது. அது தற்போது 27,645-ஆக உள்ளது. பல மாநிலங்களில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
டயா்களுக்கு ‘ஸ்டாா்’ மதிப்பீடு: வாகனங்களின் டயா்களுக்கு ‘ஸ்டாா்’ மதிப்பீடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தவும் சி1, சி2, சி3 என்ற பிரிவுகளில் டயா்களை வகைப்படுத்தவும் மோட்டாா் வாகன சட்டத்தின் 95-ஆவது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இது தொடா்பான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த மே 17-இல் வெளியிட்டது.
டயா்கள் பயன்பாட்டின்போது சாலைகளில் ஏற்படுத்தும் உராய்வு, உருளும்போது ஏற்படும் ஒலி அளவு, பிரேக் பிடிக்கும்போது நிற்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடு வழங்கப்படும். அதிக மதிப்பீடு உள்ள டயா்கள் எரிபொருள் சேமிப்பு மற்றும் செளகா்யமான பயணத்துக்கும் உதவுவதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.