தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
அவர் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகளுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டடங்களில், டோல் பிளாசாக்களின் மேற் கூரைகள் ஆகியவற்றில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்தி, அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, போக்குவரத்து, நெடுஞ்சாலை சேவைகளுக்கு பயன்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்கலாமே | இ.மதுசூதனன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான இஇஎஸ்எல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
நாக்பூர் பைபாஸ், சோலாப்பூர் யெட்ல்ஷி ஆகிய இடங்களில் டோல் பிளாசாக்களின் கூரைகள், சத்தீஸ்கர் எல்லையில் உள்ள வைகங்கா பாலம் ஆகியவற்றில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த 2018ம் ஆண்டில் 124 ஆக இருந்த, மின்சார வாகனங்களின் பதிவு, தற்போது 1356 ஆக அதிகரித்துள்ளது. சரக்கு போக்குவரத்துக்கான மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டில் 6246 ஆக இருந்தது. அது தற்போது 27,645 ஆக உள்ளது. பல மாநிலங்களில் மின்சார பேருந்துகளின் நிலவரம் இணைப்பு-1, 2-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.