கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செம்மரக் கட்டைகளை வெட்டி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வனத்தில் இருக்கும் மதிப்புமிக்க மரங்களில் ஒன்றான செம்மரத்தை கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக வெட்டி ரகசியமாக வெளிநாடுகளுக்கு கப்பல்கள் மூலம் கொண்டு செல்கிறார்கள் என்கிற தகவலை அறிந்த பெங்களூரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திப் பாட்டில் கடத்தல் கும்பலை கைது செய்யும் நோக்கில் தனிப்படை ஒன்றை அமைத்தார்.
பின் சோதனையில் ஈடுபட்டு இதில் சம்பந்தப்பட்ட முக்கியக் குற்றவாளிகள் இருவரை கைது செய்தனர் . விசாரணையில் , வெட்டி எடுத்துவரப்பட்ட செம்மரத்தில் ஒரு சின்ன பகுதியை அறுத்து அதைக்காட்டி பெரிய வியாபாரிகளிடம் பேரம் பேசியிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் இவர்களுக்கு பின் இருக்கும் குற்றவாளிகளையும் காவல்துறை தேடிவருகிறது.
பிடிபட்ட இருவரின் பெயர்கள் ஆனந்தகுமார் (51) , அணில் சிங் (47) என தெரியவந்திருக்கிறது. அவர்கள் மறைத்து வைத்திருந்த செம்மரக் கட்டைகளின் மொத்த எடை 9,135 கிலோ என்றும் அதன் சந்தை மதிப்பு 4.5 கோடி என்றும் தெரிவித்ததோடு கடத்தல்காரர்களின் லாரி மற்றும் காரை காவல்துறை பறிமுதல் செய்தது.