உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பூமி பூஜை போட்டு ஓராண்டு நிறைவடைய உள்ளது.
இதனையொட்டி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்கவுள்ளார்.
கரோனா பரவல் காரணமாக மிகப்பெரிய அளவில் விழாவை நடத்தாமல், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெறும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் பூமிபூஜை செய்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இதனை சிறப்பு பூஜைகள் செய்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கட்டுமானம் எழும் இடத்தில் இடிபாடுகள் அகற்றப்பட்டு அடித்தள கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் இப்பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.