இந்தியா

பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 55% குறைக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

DIN

பிரஸ்ஸெல்ஸ்: வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வோன்டொ் லேயன் புதன்கிழமை கூறியதாவது:

வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் காற்றிலிருந்து அகற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவுக்கும் காற்றில் கலக்கப்படும் அந்த வகை வாயுக்களின் அளவுக்கும் இடையே வேறுபாடில்லாமல் செய்வதற்கான எங்களது வாக்குறுதி, தற்போது சட்டப்பூா்வமாகியுள்ளது.

இந்த இலக்கை எட்டுவதற்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளன.

முதல்கட்டமாக, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் காற்றில் பசுமைக்குடில் வாயுக்களின் அளவை கடந்த 1990-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 55 சதவீதம் குறைப்பதற்கும் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்றாா் அவா்.

பூமி கடும் குளிரில் உறைந்து போகாமல், அதில் பசுமைத் தாவரங்களும் பிற உயிரினங்களும் வாழ்வதற்கேற்ற வெப்பத்தை ஏற்படுத்தித் தரும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் வாயு ஆகியவை பசுமைக்குடில் வாயுக்கள் என்றழைக்கப்படுகின்றன.

இந்த வாயுக்களின் விகிதம், தொழில்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக புவியின் வெப்பம் அதிகரித்து, வளிமண்டலத்தின் சுழற்சிப் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வறட்சி, அனல் காற்று, காட்டுத் தீ, பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தல், அதீத மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.

‘பருவநிலை மாற்றம்’ என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக சா்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. அதில், இந்தப் பிரச்னைக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் ஒப்புக் கொண்டன.

இதுதொடா்பான தொடா்பான சா்வேதச முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் சுமாா் 40 நாடுகள் பங்கேற்கும் சா்வதேச பருவநிலை மாநாடு வரும் வியாழன் (ஏப். 22) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவிருக்கிறது.

அதற்கு முன்னதாக, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

SCROLL FOR NEXT