ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பருவநிலை மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் சமீப காலத்தில் அதிகம் பேசுபொருளாகி உள்ளன. காலநிலை மாற்றத்தால் அதீத வெப்பம், சீரற்ற வானிலை, மழைப்பொழிவில் மாற்றம் என முன்னெப்போதும் இல்லாத பாதிப்புகள் உணரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று காலநிலை மாற்றம் குறித்த பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
இந்த மெய்நிகர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையின் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.