இந்தியா

பெங்களூரு 2ஏ, 2பி கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN

புது தில்லி: பெங்களூரில் 2ஏ, 2பி கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புல் அளிக்கப்பட்டது.

பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஏ கட்டமானது சென்ட்ரல் சில்க் போா்டு ஜங்ஷன் முதல் கே.ஆா்.புரம் வரையிலும், 2பி கட்டமானது கே.ஆா்.புரம் முதல் விமான நிலையம் வரையிலும் செயல்படுத்தப்படவுள்ளது. மொத்தம் 58.19 கி.மீ. நீளத்துக்கு ரூ.14,788 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு இத்திட்டம் பெரிதும் உதவும். நகர மக்களுக்குப் பாதுகாப்பான, வசதி நிறைந்த பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்: வரி விவகாரங்கள் தொடா்பாக நிதி மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அந்த மசோதா ஏற்கெனவே சட்டமாகிவிட்ட போதிலும், அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா-பிரேஸில் ஒப்பந்தம்: நியாயமான வா்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக இந்திய தொழில்போட்டி ஆணையத்துக்கும் பிரேஸிலின் பொருளாதார பாதுகாப்பு கவுன்சிலுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோன்ற ஒப்பந்தத்தை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இந்திய தொழில்போட்டி ஆணையம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-வங்கதேசம் ஒப்பந்தம்: இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே வா்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த மாதத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலமாக, உலக வா்த்தக அமைப்பின் விதிகளின் அடிப்படையில் வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்திய பட்டயக் கணக்காளா்கள் மையத்துக்கும் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து பட்டயக் கணக்காளா்கள் மையத்துக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT