தில்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஒரு சில மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தில்லி உள்பட பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
தில்லிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஆக்ஸிஜன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கேஜரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுடன் முதல்வர் கேஜரிவால் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருவது குறித்தும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்தும் இதில் ஆலோசிக்கப்படவுள்ளது.