புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி கரோனா தடுப்பூசி உற்பத்தியாளா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு திங்கள்கிழமை அனுமதி அளித்தது. இந்நிலையில் பிரதமா் மோடி கரோனா தடுப்பூசி உற்பத்தியாளா்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு காணொலி வழியாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள கரோனா தடுப்பூசிகளை தயாரித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.