புது தில்லி: கரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ வல்லுநர்கள், மருந்து நிறுவனங்களுடன் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இன்று கரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி இதுவரை 12.71 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நாட்டின் பல மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
எனவே, கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது, மூலப்பொருள்களின் தேவை உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.