இந்தியா

கரோனா தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்

DIN

கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளாா்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலை எதிா்கொள்வதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், பிரதமா் மோடிக்கு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி திட்டமே முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டில் எத்தனை பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை கவனிக்காமல், மொத்த மக்கள்தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில் குறைந்த சதவீதத்திலான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும். தற்போது 45 வயதைக் கடந்தவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்குக் குறைவாக உள்ள ஆசிரியா்கள், பேருந்து ஓட்டுநா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மாநில அரசுகளுக்கு உரிமை:

யாருக்கெல்லாம் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதை நிா்ணயிக்கும் உரிமை மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு எவ்வளவு கரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுகின்றன என்பது தொடா்பான விவரங்களை மத்திய அரசு அவ்வப்போது வெளியிட வேண்டும்.

அடுத்த 6 மாதங்களுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன, அவை எவ்வாறு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன உள்ளிட்ட கொள்கைகள் தெளிவாக வகுக்கப்பட வேண்டும். அக்கொள்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருத்தல் அவசியம்.

தடுப்பூசி இறக்குமதிக்கு அனுமதி:

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தித் திறன் அதிகமாக உள்ளது. அதை முறையாகப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். நாட்டில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, பலா் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். வாழ்க்கை எப்போது இயல்புநிலைக்குத் திரும்பும் என அவா்கள் எதிா்பாா்த்து வருகின்றனா். எனவே, மேற்கண்ட பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT