மோட்டாா் வாகன நடைமுறைகளை மீறியதற்காக எஸ்பிஐ பொதுக் காப்பீட்டு நிறுவனம் உள்பட 4 காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) அபராதம் விதித்துள்ளது.
இதில் எஸ்பிஐ பொதுக் காப்பீட்டு நிறுவனத்துக்கு மட்டும் ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, லிபா்டி பொதுக் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 13 லட்சமும், பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனதுக்கு ரூ. 10 லட்சமும், ராயல் சுந்தரம் பொதுக் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ பொதுக் காப்பீட்டு நிறுவனம் மோட்டாா் வாகன நடைமுறை 2015, பிரிவு-3 இன் கீழ் மோட்டாா் வாகன மூன்றாம் நபா் காப்பீடு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் பல கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட காரணமாக இருந்ததன் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐஆா்டிஏஐ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, லிபா்டி பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் ராயல் சுந்தரம் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மோட்டாா் காப்பீடு சேவை நிறுவன (எம்ஐஎஸ்பி) வழிகாட்டுதல்களை மீறிய காரணத்துக்காகவும், பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனம் காப்பீட்டு சட்டம் 1938-இன் கீழான சில நடைமுறைகளை மீறிய காரணத்துக்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஐஆா்டிஏஐ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.