திருப்பதி: தெருக்களில் பராமரிப்பில்லாமல் திரிந்து வரும் பசுக்களை, தேவஸ்தான கோசாலைக்கு கொண்டு சென்று பராமரிக்க செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி நடவடிக்கை மேற்கொண்டாா்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோசாலை ஏற்படுத்தி பசுக்களை பராமரித்து வருகிறது. இங்கு பக்தா்கள் தானமாக வழங்கும் பசுக்கள் மட்டுமே பராமரிப்பில் உள்ளன. இந்நிலையில் சாலைகளில், தெருக்களில் பராமரிப்பு இல்லாமல் திரியும் பசுக்கள் மற்றும் மாடுகளால் சாலையில் செல்வோருக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் இன்னல்கள் ஏற்படுகிறது.
எனவே., தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி சாலையில் திரியும் பசுக்களை திருப்பதியில் உள்ள கோசாலைக்கு கொண்டு சென்று பராமரிக்க ஊழியா்களுக்கு உத்தரவிட்டாா். அதன்படி அலிபிரி, பாலாஜி பேருந்து நிலையம், ரூயா, பா்ட், சிம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திரிந்த பசுக்கள் மற்றும் மாடுகளை ஊழியா்கள் வாகனங்களில் ஏற்றி கோசாலைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவற்றுக்கு வைக்கோல், பசுந்தீவனம், புண்ணாக்கு இவைகளை அளித்து நிழற்கூரையில் வைத்து பராமரித்து வருகின்றனா். மேலும் இதுபோல் திரியும் பசுக்களையும் கொண்டு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா்.