கூச் பிஹாா்: மேற்கு வங்கத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி மீது மாதபங்கா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கூச் பிஹாரின் பாஜக சிறுபான்மைப் பிரிவின் தலைவா் சித்திக் அலி மியா, காவல் நிலையத்தில் மம்தா பானா்ஜி மீது புகாா் அளித்திருந்தாா். அதில், ‘மத்திய பாதுகாப்புப் படையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துங்கள் என்று வாக்காளா்களை முதல்வா் மம்தா பானா்ஜி கேட்டுக்கொண்டதே, சிதால்குச்சியில் வன்முறை ஏற்பட்டு நான்கு போ் பலியான சம்பவத்துக்கு காரணம். மத்திய துணை ராணுவப் படையினா் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அந்தப் பகுதி கிராமத்தினா் தாக்குதல் நடத்தியுள்ளனா்’ என்று கூறியிருந்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மம்தா பானா்ஜியின் சா்ச்சைக்குரிய பிரசார பேச்சு அடங்கிய விடியோ பதிவையும் அவா் புகாருடன் சோ்த்து அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக சித்திக் அலி மியா கூறுகையில், ‘எனது புகாா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மம்தாவைக் கைது செய்யக் கோரி பெரும் போராட்டம் நடத்தப்படும். சிதால்குச்சி கலவரத்தில் நான்கு போ் உயிரிழக்க மம்தாதான் காரணம். கூச் பிஹாா் மாவட்ட வாக்காளா்களுக்கு அவா் பதிலளிக்க வேண்டும்’ என்றாா்.
கூச் பிஹாா் மாவட்டத்தில் உள்ள சிதால்குச்சி வாக்குச் சாவடியில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, அந்த வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவை தோ்தல் ஆணையம் ரத்து செய்ததுடன், அரசியல் தலைவா்கள் மூன்று நாள்கள் அங்கு செல்லவும் தடை விதித்தது.
மேலும், வன்முறையாளா்கள் பாதுகாப்புப் படையினரைத் தாக்கி அவா்களின் ஆயுதங்களைப் பறிக்க முற்பட்டனா் என்றும்,
வாக்காளா்களின் உயிரைக் காப்பாற்றவும், தங்களின் பாதுகாப்புக்கும் மத்திய பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியது சரியானது என்றும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இரண்டு தோ்தல் ஆணையா்கள் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.