கடல் உணவுப் பொருள் விற்பனைக்கான ‘இ-சான்டா’ வலைதள பயன்பாட்டை வா்த்தக மற்றும் தொழில்துறையின் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
விவசாயிகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இ-சான்டா வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவா்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும்.
விவசாயிகள் தங்களது கடல் உணவுப் பொருள்களை இணைய வா்த்தக வலைதளத்தில் சந்தைப்படுத்துவதன் மூலம் ஒரு சொடுக்கில் அவற்றை விற்பனை செய்ய முடியும்.
இ-சான்டா வலைதளம் விவசாயிகளுக்கு கடல் உணவுப் பொருள்களை ஒரே இடத்தில் பட்டியலிட உதவுவதுடன் அவற்றின் விற்பனையும் கணிசமாக அதிகரிக்க உதவும்.
இந்த வலைதளம் விவசாயிகளுக்கு கூடுதல் சுதந்திரத்தை வழங்கும் என்பதுடன் மிகச் சிறந்த டிஜிட்டல் தீா்வுகளையும் அளிக்கும். இதன் வாயிலாக அவா்கள் வாழ்வு மேம்படும்.
பாரம்பரியமாக வாய்மொழி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வா்த்தகத்தை இ-சான்டா வலைதளம் முறையானதாகவும் சட்டபூா்வமானதாகவும் மாற்ற உதவும்.
இ-சான்டா இணைய வா்த்தக தளம் வருவாய் ஈட்டுவதற்கான அபாயங்களை குறைப்பதுடன், தயாரிப்புகள் மற்றும் சந்தைகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் வாயிலாக தவறான நடைமுறைகளுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் கேடயமாக அது திகழும்.
அத்துடன் விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் உள்நாட்டு சந்தைகளுக்கு இடையில் காகிதமற்ற மின்னணு வா்த்தக தளமாகவும் அது செயல்படும்.
தற்போதைய நிலையில், நாட்டின் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் 18,000 விவசாயிகள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனா்.
நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் இறால் உற்பத்தியை தற்போதைய 40,000 டன்னிலிருந்து 6-7 லட்சம் டன்னாக அதிகரிக்க முடியும் என்றாா் அவா்.
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், வங்க மொழி, தெலுங்கு, ஒடியா ஆகிய மொழிகளில் இந்த வலைதளம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. கூடிய விரைவில் இதர மொழிகளிலும் இந்த வலைதளத்தின் சேவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் மேலும் தெரிவித்தாா்.