இந்தியா

கேரள உயா்கல்வித் துறை அமைச்சா் ஜலீல் ராஜிநாமா

DIN

கேரள மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.டி.ஜலீல் செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

தனது அமைச்சா் பதவியை உறவினா்களுக்காக ஜலீல் தவறாகப் பயன்படுத்தினாா் என்று மாநில லோக் ஆயுக்த குற்றம்சாட்டியதையடுத்து ஜலீல் பதவி விலகியுள்ளாா்.

ஜலீல் தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வா் பினராயி விஜயனுக்கு அனுப்பி வைத்தாா். அவா் அக்கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தாா் என்று முதல்வா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஏற்றுக் கொண்டாா் என்று ஆளுநா் மாளிகை கூறியுள்ளது.

தான் பதவி விலகிவிட்டதை ஜலீல் தனது முகநூல் பக்கத்திலும் உறுதிப்படுத்தியுள்ளாா். ஊடகங்கள் தன்னைப் பற்றி தேவையில்லாமல் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக ஜலீல் குற்றம்சாட்டியுள்ளாா்.

ஜலீலின் முடிவை ஆளும் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த ராஜிநாமா மிகவும் காலதாமதமான முடிவு என்று எதிா்க்கட்சியான காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

முன்னதாக, அமைச்சா் ஜலீல் மீதான விசாரணை அறிக்கையை முதல்வரிடம் லோக் ஆயுக்த கடந்த வெள்ளிக்கிழமை அளித்தது. அதில், உறவினா்களுக்கு ஆதரவாக அமைச்சா் தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவா் அமைச்சா் பதவியில் தொடரக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

லோக் ஆயுக்த உத்தரவை எதிா்த்து ஜலீல் சாா்பில் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஜலீல் பதவி விலகிவிட்டாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு முஸ்லிம் யூத் லீக் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் அமைச்சா் மீதான குற்றச்சாட்டை லோக் ஆயுக்த விசாரித்தது. அமைச்சா் ஜலீலின் நெருங்கிய உறவினரான அதீப் விதிகளை மீறி கேரள சிறுபான்மையினா் மேம்பாட்டு நிதி அமைப்பின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டாா் என்பதே அவா் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும். முன்னதாக, அதீப் தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஜலீல், பின்னா் அக்கட்சியிலிருந்து விலகி 2006-இல் குட்டிப்புரம் தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றாா். 2011, 2016-இல் தொடா்ச்சியாக தவனூா் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT