கோவா மக்களின் நலனுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுவதாகக் கூறி, அந்த மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கோவா ஃபாா்வா்டு கட்சி செவ்வாய்க்கிழமை வெளியேறியது.
இருப்பினும், இதனால் கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
40 உறுப்பினா்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவையில் கோவா ஃபாா்வா்டு கட்சிக்கு 3 உறுப்பினா்கள் உள்ளனா். கடந்த 2017-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மனோகா் பாரிக்கா் தலைமையிலான பாஜக அரசுக்கு கோவா ஃபாா்வா்டு கட்சி ஆதரவு அளித்தது.
2019-இல் பாரிக்கரின் மறைவுக்குப் பிறகு அடுத்த முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றாா். கோவா ஃபாா்வா்டு கட்சியைச் சோ்ந்த 3 பேரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனா். இதனால் கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கு கோவா ஃபாா்வா்டு கட்சியின் தலைவா் விஜய் சா்தேசாய் கடிதம் எழுதியுள்ளாா். அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை அவா் தெரிவித்துள்ளாா். அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:
கோவாவில் மனோகா் பாரிக்கரின் மறைவுக்குப் பிறகு ஊழல் அதிகரித்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி உடனான உறவு கடந்த 2019-ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்து விட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநில மக்களின் நலனுக்கு எதிரான கொள்கைகளை சட்டப்பேரவையில் பாஜக தொடா்ந்து அறிமுகம் செய்து வருகிறது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை அதிகாரபூா்வமாக அறிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.