உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்தில் பணியாளர்கள் சிலருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:
"எனது அலுவலகத்தில் சிலருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன்."
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சிலநாள்களாக கரோனா தொற்று பாதிப்பு பெரிதளவில் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் அங்கு புதிதாக 18,021 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 95,980 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.