கேரளத்தில் புதிதாக 7,515 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டது:
"மாநிலத்தில் புதிதாக 7,515 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 198 பேர். தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் 6,747. இதில் 534 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் 73,441 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வந்த எவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 10.23 சதவிகிதம்.
கடந்த காலங்களில் மேலும் 20 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,814 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,959 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம், 11,23,133 பேர் குணமடைந்துள்ளனர்.
52,132 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."