ஆந்திரத்தின் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பமிடி கிராமத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் இயந்திரத்தில் சனிக்கிழமை தீப்பிடித்தது.
சனிக்கிழமை பிற்பகல் 2.31 மணியளவில் பமிடி கிராமத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
பின்னர் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கவே, தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் ஏடிஎம் இயந்திரம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
'தீயணைப்பு நிலையத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ளது பமிடி கிராமம். சரியாக பிற்பகல் 3.14 மணிக்கு வீரர்கள் பணியில் இறங்கினர். தீயைக் கட்டுப்படுத்த சுமார் 15 நிமிடங்கள் எடுத்தன. விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை' என்று அனந்தபுரம் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அதிகாரி அவார்த்தா தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஏடிஎம்மில் எரிந்து நாசமான பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு ரூ. 44,59,284 என்று வங்கி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.