தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய ஆயுத காவல் படை பற்றிய கருத்து குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார்.
இதுபற்றி மம்தா அளித்த விளக்கம்:
"மத்திய ஆயுத காவல் படைக்கு எதிராக வாக்காளர்களை திரட்டுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை நான் மீறவில்லை."
முன்னதாக, மேற்கு வங்க பேரவைத் தேர்தலின் முதலிரண்டு கட்ட வாக்குப்பதிவில் மத்தியப் படைகள் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, மத்தியப் படைகள் பற்றிய கருத்து குறித்து அவரது நிலைப்பாட்டை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பும் இரண்டாவது நோட்டீஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.