உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமையில் உண்மைகள் மறைக்கப்படுவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 19 வயது இளம் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 14-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் இளம்பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.
இதில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்று மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, ''இந்தியாவில் ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள், அதில் உண்மைகள் அடக்கப்படுகின்றன. மேலும் பெண்ணின் இறுதிச் சடங்கிற்கான உரிமையும் அவரது குடும்பத்திடமிருந்து பறிக்கப்படுவது அநியாயமானது'' என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.