மதுரா: உ.பி மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் அமைந்துள்ள மசூதியை அகற்றக் கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து மாவட்ட சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கடவுள் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் பிறந்ததாக நம்பப்படுகிறது. தற்போது அவரது அவதார ஸ்தலமாகக் கருதப்படும் இடத்தில் சஹி இத்கா மசூதி அமைந்துள்ளது.
இந்நிலையில் கடவுள் கிருஷ்ணர் பெயரில் சில தனி நபர்கள் நண்பர்கள் மூலமாக, சஹி இத்கா மசூதி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த மாவட்ட உதவி சிவில் நீதிபதி சாயா ஷர்மா வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் தனது உத்தரவில், 1991-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சிறப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதற்கு தடை உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.