அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வெளிநாடுகளில் கச்சா எண்ணெய்யை சேமித்து வைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
"சுயசார்பு நோக்கி எரிசக்தி பாதுகாப்பு' என்ற தலைப்பிலான மாநாடு செவ்வாய்க்கிழமை தில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தர்மேந்திர பிரதான் பேசியது:
உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகிறது. 85 சதவீதம் இறக்குமதி மூலமே நமது நாட்டின் கச்சா எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆப்பிரிக்கா, வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்பட 30 நாடுகளிலிருந்து இந்தியா தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
கடந்த நிதியாண்டில் வெளிநாடுகளிலிருந்து 101.4 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் மூன்றில் இரண்டு பங்கு கச்சா எண்ணெயை, மத்திய கிழக்கு நாடுகளான இராக், சவூதி அரேபியா ஆகியவை அளித்தன.
நீண்ட கால அடிப்படையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா, ரஷியா, அங்கோலா ஆகிய நாடுகளுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அமெரிக்காவிலும், வணிக ரீதியில் சாத்தியமான பிற வெளிநாடுகளிலும் கச்சா எண்ணெயை சேமித்து வைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும், கத்தார் நாடு நமக்கு வழக்கமாக திரவ நிலையிலான எரிவாயு விநியோகம் செய்து வருகிறது. அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா ஆகிய நாடுகளிலிருந்தும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது என்றார்.
அவசரத் தேவைக்காக கச்சா எண்ணெய் சேமித்து வைப்பதில் இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக, இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஒப்பந்தம் செய்துகொண்டன. அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் இருப்பில் இந்தியாவும் சேமித்து வைக்கும் வாய்ப்பை உள்ளடக்கியது இந்த ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.