ஊடகங்களில் தன்னைப் பற்றி தவறான செய்திகள் வெளியாவதைத் தடுக்க வலியுறுத்தி நடிகை ரகுல் பிரீத் சிங் தொடர்ந்த வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக நடிகை ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டோரைக் கைது செய்து விசாரித்து வரும் என்சிபி அதிகாரிகள், ரியாவின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) உரையாடல்களின் அடிப்படையில் பாலிவுட் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலி கான், சிரத்தா கபூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், சுஷாந்த் சிங் வழக்கில் தன்னைத் தொடர்புபடுத்தி ஊடகங்களில் செய்தி வெளியாவதைத் தடுக்கும்படி தில்லி உயர்நீதிமன்றத்தில் ரகுல் பிரீத் சிங் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ரகுல் பிரீத் சிங் மீது தொடர்ந்து அவதூறாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதால், ஏற்கெனவே நடைபெற்று வரும் வழக்கில் உடனடியாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்படி அவரது வழக்குரைஞர் புதிதாக மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதி நவீன் சாவ்லா, பிரதான வழக்கு தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று, மத்திய தகவல் - ஒளிபரப்புத் துறை, இந்திய பத்திரிகை கவுன்சில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) ஆகியவை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
முன்னதாக கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற பிரதான மனு மீதான விசாரணையின்போது, ஊடகங்கள் விதிமுறைகளுக்குள்பட்டும், சுய கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.