அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது பெருமிதம் அளிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியா - ரஷியா கூட்டிணைப்பில் நீண்டதூரம் சென்று இலக்கைத் தாக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை இன்று (புதன்கிழமை) காலை ஒடிசா மாநிலம் பாலசூர் கடற்கரையில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வாழ்த்துகள். நீண்ட தூரம் பயணித்து இலக்கை அடையும் சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது பெருமிதம் அளிக்கிறது'' என்று அமித் ஷா பதிவிட்டுள்ளார்.