மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஆறாவது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
மத்திய அரசு கடந்த வாரம் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு நாடுமுழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் தொடங்கி விவசாயிகள் என பலதரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, இந்த மசோதாக்கள் சட்டங்களாக வடிவம் பெற்றன.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக நடந்து வந்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை ஆறாவது நாளை எட்டியது.