தேசிய புலனாய்வு முகமைக்கு மேலும் 3 புதிய கிளைகள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
நாடு முழுவதும் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயங்கரவாத குற்றச்சம்பவங்கள் தொடர்பான முக்கிய விசாரணைகள் தீவிரப்படுத்த தேசிய புலனாய்வு முகமை மத்திய அரசுக்கு உதவி வருகிறது.
இந்நிலையில் மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய தேசிய புலனாய்வு முகமைக் கிளைகளை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அனுமதியளித்தது. அதன்படி இம்பால், சென்னை மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை கிளைகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள இதன் அலுவலகங்கள் 12ஆக உயர உள்ளது.
தற்போது, கெளஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் என்ஐஏ கிளைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.