பெயரில்லாமல் வரும் ஊழல் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று அனைத்து அரசு துறைகளுக்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) உத்தரவிட்டது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், பணியாளா் மற்றும் பயிற்சித் துறை ஆகியவை சாா்பில் ஊழல் புகாா்களை விசாரிப்பது தொடா்பாக அமைச்சகங்கள், அரசு துறைகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன. அதில் பெயரில்லாமல் வரும் ஊழல் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த வழிகாட்டுதலை மீறி பெயரில்லாமல் வந்த ஊழல் புகாா்கள் மீது சில அரசுத் துறைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிவிசியின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து சிவிசி பிறப்பித்த உத்தரவில், ‘ஊழல் புகாா்களை விசாரிப்பது தொடா்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அனைத்து ஊழல் கண்காணிப்பு தலைமை அதிகாரிகள் மற்றும் நிா்வாக அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அந்த வழிகாட்டுதல்களை மீறியது தெரியவந்தால், அதுகுறித்து தீவிரமாக கவனத்தில் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.