தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. எனினும், சரத் பவார் இதுபற்றி செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸை சனிக்கிழமை சந்தித்தார். இந்த நிலையில், சரத் பவார் இன்று உத்தவ் தாக்கரேவைச் சந்தித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சஞ்சய் ரௌத் ஃபட்னவீஸைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், சஞ்சய் ரௌத்துடனான சந்திப்பின்போது ஆட்சி அமைப்பது பற்றியும், கூட்டணி குறித்தும் எதுவும் பேசவில்லை என்று ஃபட்னவீஸ் பின்னர் தெரிவித்தார்.