பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜஸ்வந்த் சிங்(82), சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் அறிவுசார்ந்த திறனாலும், நாட்டிற்காக ஆற்றிய சேவையாலும் என்றும் நினைவுகூறத்தக்கவர். ராஜஸ்தானில் பாஜகவை வலுப்படுத்தியதில் மிகப்பெரிய பங்கு ஜஸ்வந்த் சிங் உடையது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று பதிவிட்டுள்ளார்.