பிகார் காவல் துறை முன்னாள் தலைவர் குப்தேஷ்வர் பாண்டே ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இணைந்தார்.
பிகார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் முன்னணியில் அவர் கட்சியில் இணைந்தார்.
இதுபற்றி குப்தேஷ்வர் தெரிவித்ததாவது:
"நிதிஷ் குமார் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து, மிகுந்த அன்புடன் கட்சி உறுப்பினர் பொறுப்பை வழங்கினார். நான் அதை ஏற்றுக்கொண்டேன். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. என்னிடம் சொல்வதை நான் செய்வேன்" என்றார்.
பிகாரில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக அவர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
இதனால், அவர் அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில், அவர் கட்சியில் இணைந்துள்ளார். வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் அவரது சொந்த ஊரில் ஜேடியு சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இவர், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நிதிஷ் குமாருக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.