மேற்குவங்கத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது நான்காம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நான்காம் கட்டத் தளர்வில் பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து, தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றிற்கு ஒருசில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மேற்குவங்கத்திலும் முதல்வர் மம்தா பானர்ஜி தளர்வுகளை அறிவித்துள்ளார். பேருந்துகள், கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு தளர்வுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது திரையரங்குகளும் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, இயல்பு நிலைக்குத் திரும்பும் நோக்கில், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகள், நாடகங்கள், இசை, நடனம், மேஜிக் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை 50 அல்லது அதற்கும் குறைவான பார்வையாளர்களுடன் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இவற்றில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.