வேளாண் பொருள்களின் விற்பனையில் இடைத்தரகர்களுக்கு இடம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதில் விவசாயிகளின் பங்களிப்பு முக்கியமானது.
கரோனாவால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். வேளாண் பொருள்கள் விற்பனையில் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விவசாயிகள் நேரடியாக பலன் அனுபவிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டும். இளைஞர்கள் விவசாயப் பணிகளில் அதிக ஆர்வமுடன் ஈடுபட்டு வருவது வரவேற்க்கத்தக்கது.
வேளாண்துறை, நமது விவசாயிகள், நமது கிராமங்கள் ஆகியன தற்சார்பு பாரதத்தின் முதுகெலும்புகள். அவை ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடும் ஆரோக்கியமாக இருக்கும்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட இருக்கிறோம். நாம் அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்டம் தொடர்பான ஊக்கமளிக்கும் சம்பவங்களை நீங்கள் உங்கள் கதைகள் வாயிலாக பரப்புரை செய்ய முடியுமா?
தமிழகத்திலும், கேரளத்திலும் பாரம்பரிய முறையில் கதை சொல்லும் யுக்தி கையாளப்பட்டு வருவது மிகவும் சிறப்புக்குரியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பீடித்திருக்கும் இந்த காலகட்டத்தில் நான் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள். ஒரு மீட்டர் இடைவெளி என்ற விதிமுறை, உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தாரையும் காக்கக்கூடியது'' என்று பிரதமர் மோடி பேசினார்.