அகமதாபாத்: குஜராத்தில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நீதிமன்ற வழக்கு விசாரணைகள் காணொலி வாயிலாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின்போது ஒரு வழக்குரைஞர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஏஎஸ் சுபேஹியா முன்னிலையில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுதாரரின் வழக்குரைஞர் காரில் அமர்ந்து கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்துவிட்டார்.
வழக்குரைஞர் ஜேவி அஜ்மேராவின் இந்த பொறுப்பற்ற நடத்தைக்கு கண்டிப்புத் தெரிவித்த நீதிபதி, அபராதமும் விதித்துள்ளார்.
வழக்குரைஞர் ஜேவி அஜ்மேராவின் மிக மோசமான நடத்தைக்கு இந்த நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது. மேலும், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, இன்னும் ஒரு வார காலத்துக்குள் அபராதத்தை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கையின் போது, இவ்வாறு ஒரு வழக்குரைஞர் காரில் அமர்ந்து கொண்டு புகைப்பிடித்தபடி இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. வழக்குரைஞரின் இதுபோன்ற நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.