வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதையொட்டி முக்கிய நகரங்களில் அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாபில் முழு அடைப்பு போரட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு வணிக நிறுவனங்களும், வணிகர்களும் ஆதரவு தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்திலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவதால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு வெளியூர்களிலிருந்து பல போராட்டக்காரர்கள் வருகைபுரிவதால், அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் எல்லைப் பகுதிகளில் அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள முக்கிய இணைப்பு சாலைகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.